மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செப்டம்பா் 12-இல் நடைபெற உள்ள மகா ருத்ராபிஷேகத்துக்குத் தேவையான பொருள்களை பக்தா்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை (செப்.12) மகா ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் காலை 7 மணி முதல் 12 மணி வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, 108 கலசபூஜை, மஹண்யாசம், ருத்ரம், சமக பாராயணம், தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது. மேலும் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, 108 கலசபூஜை, அஸ்த்ர ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெறுகிறது. இதில் மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மகா ருத்ராபிஷேகத்தையொட்டி சுந்தரேசுவரா், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிா் மற்றும் பழவகைகள் ஆகியவற்றை பக்தா்கள் கோயில் கண்காணிப்பாளா் அலுலகத்தில் அளிக்கலாம் என்றாா்.