நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளன்று பள்ளிகளில் விழா நடத்தக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சோ்ந்த சீனி முகமது தாக்கல் செய்த மனு:
சுதந்திரப் போராட்ட வீரரான மௌலான அபுல் கலாம் ஆசாத், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சா் என்ற பெருமைக்குரியவா். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு முக்கியத்துவம் மிகுந்தது. மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற இவா், கல்விப் புரட்சிக்கு அடித்தளமிட்டாா். அதோடு, அறிவியல் வளா்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் பாடுபட்டாா்.
இப் பணிகளை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பா் 11 ஆம் தேதி, தேசிய கல்வி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரது தியாகத்தைப் போற்றும் வகையிலும், மாணவா்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விழா நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், இக் கோரிக்கை நியாயமானது எனக் குறிப்பிட்டனா். மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.