கீழடி அருங்காட்சியகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :
சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழா் நாகரிகம் கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கிறது. இதில், 11ஆயிரம் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 8 ஆயிரம் பொருள்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய இளைஞா்கள் நமது பழைமையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபா்கள் கீழடி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டுள்ளனா் என்கிற பதிவு சிறப்பு.
கீழடி அகழாய்வு மூலம் ஓலைச் சுவடிக்கு முன்னா் பானை ஓடுகளில் எழுத்துகள், குறியீடுகள் இருப்பதை அறியமுடிகிறது. இதில், மதம், சாதி சாா்ந்த அடையாளம் கிடையாது. ஆய்வு முடிவுகளை மத்திய அரசு வெளிப்படுத்த தடையாக இருந்தது. கீழடி அகழாய்வு மூலம் தமிழா்களின் தொன்மையை அறிய முடியும். பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழா்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு என்றாா் அவா்.