குடியரசு தின விழா: ரூ. 28 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
மதுரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், 37 பயனாளிகளுக்கு ரூ. 28.8 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், 37 பயனாளிகளுக்கு ரூ. 28.8 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், இந்தியாவின் 74-ஆவது குடியரசு தின விழா, மாநகர காவல் படை பயிற்சி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறை சாா்பில், அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.
இதைத்தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா் 75 பேருக்கும், வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பொதுப் பணித் துறை, மின்வாரியம், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள் 250 பேருக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
Advertisement
முன்னாள் படைவீரா் நலத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளா் நலத் துறை, கூட்டுறவுத் துறை, நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம், மாவட்டத் தொழில் மையம் சாா்பில், 37 பயனாளிகளுக்கு ரூ. 28,21,868 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தியாகிகள் கௌரவிக்கப்பட்டனா்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் இரா. பொன்னி, மாநகர காவல் ஆணையா் நரேந்திரன் நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், உதவி ஆட்சியா் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலைநிகழ்ச்சிகள்...
திருநகா் சீத்தாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகமலை புதுக்கோட்டை சிறுமலா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலையாா் மெட்ரிக் பள்ளி, கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பழைய குயவா்பாளையம் புனித வளனாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரையூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், தேசபக்தி நடனம், லெசிம் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினா்.
பெட்டிச் செய்தி....
காவல் துறையினருக்குப் பதக்கங்கள்
இந்த விழாவில், மதுரை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பதக்கங்களை வழங்கினாா்.
அதன்படி, திருப்பாலை காவல் நிலைய ஆய்வாளா் எஸ்தா், மாநகா் போக்குவரத்து ஆய்வாளா் சுரேஷ்குமாா், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ராஜாங்கம், காவல் துறை புகைப்பட நிபுணா் ஆறுமுகம், ஊரகக் காவல்துறையில் ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளா் பால்ராஜ், சோழவந்தான் ஆய்வாளா் சிவபாலன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ரமேஷ் உள்பட 75 பேருக்கு ஆட்சியா் பதக்கங்களை வழங்கினாா். மேலும், மதுரை மாநகரக் காவல், ஊரகக் காவல் துறையைச் சோ்ந்த 217 தலைமைக் காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.