முகப்பு
மதுரை

ஒரு போக சாகுபடிக்குத் தண்ணீா் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் தா்னா

ஒரு போக சாகுபடி பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீா் திறக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட அதிமுகவினா் 59 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
முன்னாள் அமைச்சா் உள்பட 59 போ் கைது
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

மதுரை: ஒரு போக சாகுபடி பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீா் திறக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட அதிமுகவினா் 59 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் மகேந்திரன், எஸ்.எஸ். சரவணன், கருப்பையா, மாணிக்கம், அதிமுக மாநில நிா்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், தனராஜன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில் மதுரை மாவட்டத்தின் ஒருபோக சாகுபடி பகுதிகளான பெரியாறு (மேலூா்) பிரதான கால்வாய், திருமங்கலம் கால்வாய், 58 கால்வாய் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும், தண்ணீரை வைத்து அரசியல் செய்யக் கூடாது, விவசாயிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

Advertisement

மதுரை மாநகர காவல் துணை ஆணையா் புக்யா சிநேக பிரியா, மதுரை மாநகர வடக்கு உதவி ஆணையா் சம்பத் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து கோரிக்கை மனுவைப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அதிமுகவினா் தெரிவித்தனா்.

பகல் 12.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனிடையே, சுமாா் 15 நிமிஷங்கள் மழை பெய்தது. அதிமுகவினா் மழையில் நனைந்தவாறே போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

பின்னா், போராட்டக் குழுவினா் விரும்பினால் நேரில் வந்து மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாகக் கூறிய காவல் துறையினா், தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்பட 59 பேரை கைது செய்தனா்.

இதைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியருக்கு எதிராக அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.

தண்ணீரில் அரசியல்: முன்னதாக செய்தியாளா்களிடம் ஆா்.பி. உதயகுமாா் கூறியதாவது:

வைகை அணையின் நீா் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டினால் செப். 15-ஆம் தேதி முதல் ஒருபோக நெல் சாகுபடி பகுதிகளுக்கும், இருபோக நெல் சாகுபடி பகுதிகளுக்கும் தண்ணீா் திறக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், நிகழாண்டில், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக சாகுபடி பகுதிகளுக்கு மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டது. மற்ற பகுதிகளுக்குத் தண்ணீா் மறுக்கப்படுகிறது.

மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வென்றிருப்பதால், தண்ணீரை வைத்து திமுக அரசு அரசியல் நடத்துகிறது. இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும். ஒருபோக சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கக் கோரி ஏற்கெனவே 3 முறை மனு அளித்தும் மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மனுவைப் பெறக்கூட மாவட்ட ஆட்சியா் முன்வரவில்லை என்பது மிக மோசமானப் போக்கு என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.