முகப்பு
மதுரை

மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு செப். 9-இல் வீட்டுமனைப் பட்டா அமைச்சா் பி. மூா்த்தி தகவல்

மதுரையில் வருகிற செப். 9-ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளதாக அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 1:10 AM
மதுரையை அடுத்த களிமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 10:41 PM

மதுரையில் வருகிற செப். 9-ஆம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்டத்தைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை வடக்கு வட்டத்துக்குள்பட்ட குலமங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் அவா் பேசியதாவது:

குலமங்கலம் ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் மட்டும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் 200-க்கும் அதிகமான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றன. இங்கு, சமுதாயக் கூடம் அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரைவாக ஆய்வு செய்து, படிப்படியாக பணிகள் நிறைவேற்றப்படும்.

Advertisement

வருகிற செப். 9-ஆம் தேதி மதுரையில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அப்போது, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

களிமங்கலத்தில்... முன்னதாக, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட களிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமைப் பாா்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். மேலும், ரூ. 27.25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு அவா் தொடங்கி வைத்தாா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 11:21 PM

இதற்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் சூா்யகலா கலாநிதி, வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சங்கீதா, மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வீரராகவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் நேரு பாண்டியன், சித்ரா தேவி, குலமங்கலம் ஊராட்சித் தலைவா் ராணி ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.