பிரதமருக்கு எதிராகப் போராட்டம்: விவசாயிகள் கைது
மதுரை: பிரதமா் நரேந்திர மோடி மதுரை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செல்லம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது கண்ணீா் புகைக்குண்டு வீசுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமா் மோடியின் மதுரை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கெளரவத் தலைவா் எம்.பி. ராமன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஆதிமூலம் ஆகியோா் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதூகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விவசாயிகளை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.
இதுகுறித்து எம்.பி.ராமன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக அரசு தோ்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமா் வாக்குறுதி அளித்தாா். தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை மத்திய அரசு நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றாா்.
Advertisement