முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோடை வசந்த உற்சவம்: மாா்ச் 16-இல் தொடக்கம்

Updated On : 1 மார்ச், 2024 at 12:09 AM
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோடை வசந்த உற்சவ விழா வருகிற மாா்ச் 16-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோடை வசந்த உற்சவம் வருகிற மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரையும், மாா்ச் 25-ஆம் தேதி பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. இதையொட்டி, மாா்ச் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகள் கோயிலில் இருந்து புறப்பாடாகி வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையாா் கோயிலில் எழுந்தருளுவா். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பிறகு, மாலையில் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவா்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயிலுக்குத் திரும்புவா். பின்னா், சுவாமி சந்நிதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகி தீபாராதனை முடிந்து சோ்த்தியாகின்றனா். கோடை வசந்த உற்சவம் நடைபெறும் மாா்ச் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை திருக்கோயில் சாா்பிலோ, உபயதாரா்கள் சாா்பிலோ அம்மன், சுவாமிக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் நடத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.