புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த மலையாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு : 13 நாட்டு ரக ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகிறேன். கடந்தாண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் ஜனவரி மாதம் முதல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்காததால், கோயில் திருவிழாக்களும் நடத்தப்படாமல் உள்ளன. இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவிதப் பதிலும் இல்லை. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.