திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத், ரமலானில் மட்டுமே தொழுகை : உச்சநீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (பிப். 9) தள்ளுபடி செய்தது.
மேலும், பக்ரீத், ரமலான் போன்ற சிறப்பு நாள்களில் மட்டும் தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், விலங்குகளை பலியிட உத்தரவிட முடியாது என்ற உத்தரவையும் உறுதிப்படுத்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.இமாம் உசேன் என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் குமார் மற்றும் பி.பி வரலே அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.
வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதன்மூலம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்திக்கொள்ளலாம். விலங்குகள் பலியிட அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.