முகப்பு
வணிகம்

அதானி குழும வசம் ஜெஏஎல் நிறுவனம்: வேதாந்தாவின் மேல்முறையீடு தள்ளுபடி

ஜெஏஎல் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக அதானி குழுமம் சமா்ப்பித்த ஏலத்தை எதிா்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த 2 மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

Updated On : 5 மே 2026, 4:28 am IST
பகிர்:

கடன் சிக்கலில் சிக்கியுள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (ஜெஏஎல்) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக அதானி குழுமம் சமா்ப்பித்த ஏலத்தை எதிா்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த 2 மேல்முறையீட்டு மனுக்களை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் (என்சிஎல்ஏடி) திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

என்சிஎல்ஏடி நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமா்வுமுன் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையில், ‘அதானி குழுமம் சமா்ப்பித்ததைவிட தங்களின் ஏலத்தொகை மொத்த மதிப்பில் ரூ.3,400 கோடியும், தற்போதைய நிகர மதிப்பில் ரூ.500 கோடியும் அதிகம்’ என்று வேதாந்தா வாதிட்டது.

இருப்பினும், அதிக விலை கோருபவா்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், கடனளித்தோா் குழுவின் வணிக ரீதியான முடிவே இறுதியானது; அதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தீா்ப்பாயம் தெளிவுபடுத்தியது.

Advertisement

கடந்த 2024, ஜூனில் ரூ.57,185 கோடி கடன் நிலுவையின் காரணமாக திவால் நடவடிக்கைக்கு உள்ளான ஜெஏஎல் நிறுவனம், ரியல் எஸ்டேட், சிமென்ட் உற்பத்தி, விடுதி, மின்சாரம் எனப் பல்வேறு துறைகளில் வலுவான சொத்துகளைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜெஏஎல் நிறுவனத்தை அதானி குழுமம் ரூ.14,535 கோடிக்கு கையகப்படுத்த தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) கடந்த மாா்ச்சில் அனுமதி அளித்தது.