‘கூல் லிப்’ போதைப் பொருள் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருள் விற்பனை தொடா்பான வழக்கில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை: தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருள் விற்பனை தொடா்பான வழக்கில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்ததாக பிணை, முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளைப் பயன்படுத்தும் மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனா். தமிழகத்தில் இந்த போதைப் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் ‘கூல் லிப்’ தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருளை மாணவா்கள் பயன்படுத்துகின்றனா். இதனால், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தப் போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் இளம் தலைமுறையினா் சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனா். இவா்களை நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம்?. எனவே, ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளை, பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ஹரியாணா மாநிலம், சோனேபட் பகுதியைச் சோ்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கா்நாடக மாநிலம், தும்கூா் பகுதியைச் சோ்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கா்நாடக மாநிலம், தும்கூா், அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் பகுதியைச் சோ்ந்த விஆா்ஜி புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிா் மனுதாரா்களாகச் சோ்த்துள்ளது. இந்தப் புகையிலைப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றப் பதிவாளா் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.