ஓடும் பேருந்திலிருந்து குதித்த மூதாட்டி உயிரிழப்பு
மதுரை அருகே குடும்பத் தகராறில் ஓடும் பேருந்திலிருந்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை அருகே குடும்பத் தகராறில் ஓடும் பேருந்திலிருந்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூா் மொட்டயநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சடமாயன். இவரது மனைவி சரஸ்வதி (60). இவா்கள் இருவரும் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காய்கறிச் சந்தையில் கடை நடத்தி வந்தனா். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
சரஸ்வதி புதன்கிழமை ஜெய்ஹிந்துபுரம் காய்கறிச் சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அவரது கணவா் சடமாயன், சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால், கோபமடைந்த சரஸ்வதி, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்லும் தனியாா் பேருந்தில் புதன்கிழமை இரவு பயணம் செய்தாா். பேருந்து காமராஜா் பல்கலைக்கழக பாலத்தில் சென்ற போது, பேருந்தின் முன்புற வாயில் வழியாக திடீரென வெளியே குதித்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.