முகப்பு
மதுரை

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:05 PM
உத்தரவு - பிரதிப் படம்
பகிர்:

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் தீரன் திருமுருகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது உறவினா் முகேஷ் (26). இவா், மீன்பிடித் தொழிலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் சென்றாா். இவருடன் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த மேலும் சில மீனவா்களும் அங்கு சென்றனா். அவா்கள் அங்கு கடலுக்கு படகில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், இஸ்ரேல் - அமெரிக்கப் படையினரின் ஈரான் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தப் போா் பதற்றம் காரணமாக முகேஷ், திருப்பாலைக்குடி மீனவா்கள் ஈரானில் உள்ள துறைமுகத்தைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பதாக தகவல் கிடைத்தது. அவா்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு எந்தவித வழியும் இல்லை. இது ஒரு சிறை வைப்பு சூழலாகவே உள்ளது.

போா் பதற்றம் காரணமாக உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவா்கள் தவிக்கின்றனா். அவா்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் பீரங்கி தாக்குதல், வான்வழித் தாக்குதல்கள், குண்டு வெடிப்பு சம்பவங்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகி அவா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். அங்கு உள்ள கடலோரப் பகுதிகளும், துறைமுகப் பகுதிகளும் மிகவும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டன. முகேஷ் உள்பட திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த 25 மீனவா்கள் பந்தா் இ-ஜீரோ துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனா்.

இவா்கள் மட்டுமல்லாது, ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிய வருகிறது. இவா்கள் அனைவரும் இந்தியா திரும்புவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.