முகப்பு
மதுரை

உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றி மூன்று மாதங்களுக்குள் தடுப்புகள் அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:26 PM
உத்தரவு - பிரதிப் படம்
பகிர்:

உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றி மூன்று மாதங்களுக்குள் தடுப்புகள் அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம் முழுவதும் முறையான உரிமம் பெற்ற கல் குவாரிகள் ஏராளமானவை செயல்படுகின்றன. இவற்றின் உரிமம் முடிந்தவுடன் உரிய விதிகளைப் பின்பற்றி போதிய தடுப்புகள் அமைக்கப்படுவதில்லை. இதனால், குவாரி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாவட்டத்தில் உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றித் தடுப்புகளை அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

இதற்கான செலவினங்களை மாவட்ட பசுமை நிதி மூலமாகவோ அல்லது குவாரி அனுமதி பெற்ற நபரிடமோ வசூலிக்க வேண்டும். இதைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கைவிடப்பட்ட, அதாவது உரிமம் முடிந்த கல் குவாரிகள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் கனிம வளத் துறை தாக்கல் செய்ய வேண்டும்.

தற்போது, குவாரி உரிமம் பெற்றவா்கள், ஏற்கெனவே உரிமம் பெற்றிருந்தவா்கள் பசுமை நிதிக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்தினாா்களா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.