திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது குறித்து...
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க விமரிசையாக தொடங்கியது.
தேரோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமியும் தெய்வானையும் பெரிய வைரத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (ஏப். 5) சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருமண கோலத்தில் சன்னதி முன்பு இருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க காலை 6.45 மணியளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு சென்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பெரிய ரத வீதி வழியாக கிரிவலப் பாதையை சுற்றி வந்து 11 மணிக்குமேல் நிலையை வந்து அடையும். தேர் நிலையை வந்தடையும்வரை கோயில் நடை சாத்தப்படும். தேர் நிலைக்கு வந்தபின்னரே நடை திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேரோட்ட நிகழ்வைக் காண மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.