வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!
இளையனார் வேலூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்..
வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூரில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் இன்று திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் இளையனர் வேலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். மலையன், மாகரன் என்ற இரு அசுரர்களை வேல் கொண்டு வதம் செய்து ஆறடி உயரம் கொண்ட மூலவராகக் காட்சி தந்து வருகிறார் பாலசுப்பிரமணிய சுவாமி.
இத் திருக்கோயிலின் சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களை வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கிராம வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வந்தார்.
Advertisement
இன்று ஏழாம் நாள் திருவிழாவில் அதிகாலை மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து உற்சவர் வள்ளி தெய்வானை சமேதராக திருத்தேரில் எழுந்தருள மேல வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் திருத்தேர் கிராம வீதிகளில் வலம் வந்தது. நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து இழுக்க ஜேசிபி உதவியுடன் திருத்தேர் வலம் வந்தது.
திருத்தேர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செயல் அலுவலர் ப.கதிரவன் அறங்காவலர் குழு தலைவர் து. கோதண்டராமன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கிராம பொதுமக்கள் இணைந்து செய்தனர்.