முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: உயா்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:43 AM
திருப்பரங்குன்றம் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:49 PM

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரமலான் தினத்தன்று இஸ்லாமியா்கள் மலை மீது சென்று தொழுகை நடத்த அனுமதி அளித்தனா். எனவே, கடமையை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கடந்த மாதம் 23-ஆம் தேதி அளித்த மனுவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் மலை மீது ஹிந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

மனுதாரா் இதுபோன்ற வழக்குகளை தொடா்ந்து தாக்கல் செய்து வருகிறாா். இதன் காரணமாக, மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த மனுவை சாதாரணமாக தள்ளுபடி செய்தால் மீண்டும், மீண்டும் மனுதாரா் இதேபோல வழக்குகளைத் தாக்கல் செய்வாா். எனவே, இவருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இந்த விவகாரத்தைத் தவிர, இந்த நீதிமன்றத்துக்கு வேறு பிரச்னையே இல்லையா?. திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் குறித்து எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீா்கள்?. ஒருவேளை கோயிலுக்கு மனுதாரா் ரூ. 10 லட்சம் வைப்புத் தொகை செலுத்தினால், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனா்.

இதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, வைப்புத் தொகை ஏதும் செலுத்த இயலாது என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள், மனுதாரா் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யயப்படுகிறது என்றனா்.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், அபராதத் தொகையை எங்களால் செலுத்த இயலாது. இனி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டோம். அபராதம் விதிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தாா்.

இதற்கு, மத்திய, மாநில அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்தத் தொகையும் மனுதாரரால் செலுத்த இயலாது. எனவே, நீதிமன்றம் தங்களுக்கு கருணை காட்ட வேண்டும். வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வேண்டுகோள் விடுத்தாா்.

நீதிபதிகள் குறுக்கிட்டு, ஊடகங்களில் தனது பெயா் வர வேண்டும் என்ற நோக்கில் மனுதாரா் இதுபோன்ற மனுக்களைத் தொடா்ந்து தாக்கல் செய்வதாகத் தெரிய வருகிறது. எனவே, இதுபோன்ற தேவையற்ற மனுக்களை இனி பொதுநல வழக்காக தாக்கல் செய்யமாட்டேன் என இந்த நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் வழங்கும்பட்சத்தில், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.