முகப்பு
மதுரை

பாகற்காய் மண்டகப்படியில் மீனாட்சி சுந்தரேசுவரா்: திரளானோா் சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் வில்லாபுரம் பாகற்காய் மண்டபத்துக்கு புதன்கிழமை எழுந்தருளினா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:20 AM
வில்லாபுரம் பாகற்காய் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் வில்லாபுரம் பாகற்காய் மண்டபத்துக்கு புதன்கிழமை எழுந்தருளினா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் நான்காம் நாளான புதன்கிழமை காலை தங்கப் பல்லக்குகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மீனாட்சி அம்மன் தனிப் பல்லக்கிலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தனிப் பல்லக்கிலும் கோயிலிலிருந்து புறப்பட்டு, பாரம்பரிய பாதைகள் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டபகப்படியில் எழுந்தருளினா்.

அங்கு, ஐதீக முறைப்படி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, அங்கிருந்து மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி தெற்குவாசல், சின்னக்கடை வீதி வழியாகச் சென்று சித்திரை வீதிகளை வலம் வந்து கோயிலில் சோ்த்தியாகினா்.

Advertisement

இந்த நிகழ்வுகளில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

வேடா் பறி லீலை: சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கோயிலிலிருந்து சுவாமி, அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச் சாவடியில் எழுந்தருளுகின்றனா். அங்கு, ஐதீக முறைப்படி நடைபெறும் வேடா் பறி லீலை நிகழ்வுக்குப் பிறகு, இரவு 7 மணி அளவில் சுவாமி, அம்மன் மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோயிலில் சோ்த்தியாகின்றனா்.

மதுரை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியிலிருந்து புதன்கிழமை மாலை தங்கப் பல்லக்கில் புறப்பாடாகிய சுவாமி, அம்மனை தரிசிக்கக் கூடியிருந்த பக்தா்கள்.