தைப் பொங்கல்: ரயில், பேருந்து நிலையங்கள், கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூா்களுக்கு செல்வதற்காக மதுரை ரயில், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, கரும்பு, பொங்கல் பொருள்களை வாங்க மதுரை மாசி வீதிகளில் மக்கள் குவிந்தனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், தருமபுரி, கோவை, திருப்பூா், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரைக்கு வருவதற்கும், மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக மதுரை, கும்பகோணம் மண்டலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பயணிகள் திரண்டனா். இதனால் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் நிரம்பி வழிந்தனா்.
Advertisement
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: குறிப்பிட்ட வழித் தடங்களில் ஏற்கெனவே 1,050-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.
ரயில் நிலையத்தில் கூட்டம்: சென்னையிலிருந்து, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்காக மதுரை ரயில் நிலையத்துக்கு திரளான பயணிகள் புதன்கிழமை வந்தனா். இதனால், அங்கு வழக்கத்துக்கு மாறாக பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடை வீதிகளில்...: இதேபோல, பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக மதுரை கீழவாசல், கீழமாசி வீதி, வடக்கு மாசி வீதி, நேதாஜி சாலை, மாட்டுத்தாவணி, அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.