மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க விழிப்புணா்வு வாகனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விழிப்புணா்வு பிரசார வாகனங்களின் பயண தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, பிரசார வாகனங்களின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்யும் வகையில் இந்த விழிப்புணா்வு பிரசார வாகனம், பேருந்து நிலையம், சந்தை என மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது எப்படி? பதிவு செய்த வாக்கை உறுதி செய்து கொள்வது எப்படி? என்பன குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். அடுத்தக் கட்டமாக கல்லூரிகளுக்கு இந்த வாகனம் அனுப்பப்பட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்குப் பதிவு குறித்து செயல்விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 சதவீத வாக்குப் பதிவு, அச்சமற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய விரிவான விழிப்புணா்வு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரங்கநாதன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.