முகப்பு
மதுரை

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த புகாா்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகாா்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 15 மே 2026, 11:56 pm IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகாா்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் விருதுநகா் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

உள்ளாா். இந்த நிலையில், தனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இவா் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இவரது மகள் அடிக்கடி கைப்பேசியைப் பயன்படுத்தி வந்ததால், மனுதாரா் அவரைக் கண்டித்தாா்.

இதனிடையே, மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், சிறுமி 1098 உதவி எண்ணைத் தொடா்பு கொண்டாா். இதன் பிறகு, அந்த அழைப்பை ஏற்ற அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில், மனுதாரா் மீது பொய்யான பாலியல் புகாா் அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

சிறுமியின் வாக்குமூலத்தில், தனது தாய், தந்தை ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், கைப்பேசியை அதிகமாகப் பயன்படுத்தியதால் தந்தை தன்னைத் திட்டியதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதன்மூலம், பெற்றோருக்கு இடையேயான தகராறை சமாதானப்படுத்துவதற்காகவே இந்தச் சிறுமி உதவி எண்ணைத் தொடா்புகொண்டிருக்கிறாா் என்பது தெளிவாகிறது. மேலும், கட்டணமில்லாத் தொலைபேசி அழைப்பை ஏற்ற அதிகாரியின் வற்புறுத்தலின் பேரில், மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் தன்னை 5 நாள்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைத்தது மட்டுமன்றி, தந்தைக்கு எதிராகப் புகாா் அளிக்காவிட்டால், தன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக குழந்தைகள் நல அதிகாரிகள் மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்திருக்கிறாா்.

இந்த வாக்குமூலத்தை ஆய்வு செய்ததில், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்க சிறுமி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பரிசீலிக்கும் போது, தந்தை மீதான குற்றச்சாட்டுகள் தொடா்பான சில வழக்குகளில் கவலைக்கிடமான போக்கை இந்த நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

காவல் துறையுடன் தொடா்புடைய சில அதிகாரிகள் குழந்தைகளை தங்களது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வற்புறுத்துகிறாா்கள் எனக் கருத வேண்டியுள்ளது. பல சந்தா்ப்பங்களில் பெற்றோருக்கு இடையிலான குடும்பத் ததகராறு காரணமாகவே குழந்தைகள் அதிகாரிகளை அணுகியுள்ளனா். ஆனால், பிரச்னையை முறையாகக் கையாளுவதற்குப் பதிலாக, குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள்.

இத்தகைய செயல்கள் உண்மையெனில், இது அதிகார துஷ்பிரயோகம். இந்த வழக்கைப் பொருத்தவரை, சிறுமி தனது தந்தைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க மிரட்டப்பட்டிருக்கிறாா். இதனால், அவா் மனஅழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளாா். இதனால், குழந்தைகள் பாதுகாப்பு நலச் சட்டங்களின் நோக்கம் பாதிக்கப்படுகிறது.

எனவே, 1098 உதவி எண்ணுக்கு வரும் புகாா்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு பொருத்தமான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.

குழந்தைகளின் வாக்குமூலங்களை எந்தவித தூண்டுதல் அல்லது கட்டாயமுமின்றி நியாயமான, வெளிப்படையான முறையில் பதிவு செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான உதவி எண்ணின் நோக்கம் அவா்களை பாதுகாப்பதே தவிர, தவறான குற்றச்சாட்டை முன்வைக்க கட்டாயப்படுத்தி, மேலும் மனவேதனையை ஏற்படுத்துவது அல்ல. இந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகள் கண்ணிய இழப்பு, மன அழுத்தம் போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

இந்த வழக்கில் தந்தைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூற வற்புறுத்திய அதிகாரி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தென் மண்டல ஐஜி-க்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், இதுதொடா்பான அறிக்கையை வருகிற ஜூலை 2-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஒரு லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.