திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கியில் ஏராளமான விவசாயிகள் சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளதால் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்) அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் தொண்டி,ஆர் எஸ் மங்கலம்,திருவாடானை ஆகிய பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இவ்வங்கியில் தற்போது பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவதற்காக ஒவ்வொரு வங்கியிலும் ஆயிரக்கணக்காண வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளனர்.
தற்போது பெரும்பாலான வங்கிகளில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் உள்ளநிலையில், மத்திய கூட்டுறவு வங்கியில் இதுவரை தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்கவில்லை. வரும் காலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டும். அப்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படும். எனவே மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.