பாம்பன் அருகே தரை தட்டிய கப்பல் ரயில் பாலத்தை கடந்து சென்றது
தரைதட்டி நின்ற மிதவை கப்பல் ஒரு வாரத்திற்கு பின் சனிக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தை கடந்து குஜராத் சென்றது.
தரைதட்டி நின்ற மிதவை கப்பல் ஒரு வாரத்திற்கு பின் சனிக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தை கடந்து குஜராத் சென்றது. இதனையடுத்து சரக்கு கப்பலும் கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து குஜராத் செல்வததற்காக மிதவை கப்பல் வந்தது. இதே போன்று மேலும் மூன்று கப்பல்கள் வந்தது. மூன்று கப்பல்கள் மட்டும் சென்ற நிலையில், குஜராத் செல்ல வேண்டிய கப்பல் மட்டும் அதிக நீரோட்டம் காரணமாக, பாம்பன் ரயில் பாலத்தை கடக்க முடியாமல் தரை தட்டி நின்றது. இதன்பின் இக்கப்பல் மீட்கப்பட்டு ஆழம் நிறைந்த பகுதிக்கு சென்றது. கடல் சீற்றமாக காணப்பட்டதால், இந்த கப்பல் ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்போது பாம்பன் பகுதியில் கடல் நீரோட்டம் குறைந்ததை அடுத்து, துறைமுக அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கப்பல் கடந்து செல்ல அனுமதி கோரினர்.
இதனை ஏற்று சனிக்கிழமை ரயில்வே நிர்வாகம் கப்பல் கடந்து செல்ல அனுமதி அளித்ததது. இதனையடுத்து சனிக்கிழமை பாம்பன் ரயில் பாலம் திறந்து மிதவை கப்பல் கடந்து சென்றது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கடலூர் செல்ல வந்த சரக்கு மிதவை கப்பலும் கடந்து சென்றது. ஒரே நேரத்தில் இரு கப்பல்கள் ரயில் பாலம் திறந்து கடந்து சென்றதை , சுற்றுலா பயணிகள் பாம்பன் சாலை பாலத்தில் நின்று ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.