எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய இந்தியர் தேர்வு!
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணிபுரிய ஐஐடி மும்பையில் படித்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணிபுரிய ஐஐடி மும்பையில் படித்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வாகியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணியாற்ற, ஐஐடி மும்பையில் படித்த இந்தியரான தேவேந்திர சிங் சாப்லட்டை நியமித்துள்ளார். இவர், எலான் மஸ்க்கின் நேரடி பார்வையின்கீழ் பணிபுரியவுள்ளார்.
தேவேந்திர சிங், 2010-ல் ஐஐடி-ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 25-வது இடத்தைப் பிடித்தவர். மேலும், சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் சர்வதேச அளவில் 5-வது இடத்தையும் பிடித்தார்.
தொடர்ந்து, ஐஐடி மும்பையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்று, கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கற்றல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் முகநூலின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் தேவேந்திர சிங் பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தென் கொரியாவில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமையகத்திலும் சுமார் ஒரு வருடம் பணியாற்றியுள்ளார்.
உலகளவில் ஏஐ துறை தொடர்ந்து நாளுக்குநாள் முன்னேறியும், புதுமைகளும் புகுத்தப்பட்டு வரும்நிலையில், தங்களுக்கான நிலையான இடத்தைப் பெற பல்வேறு நிறுவனங்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (டிவிட்டர்), மெட்டா, கூகுள், ஓபன்ஏஐ ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், தனது நிறுவனங்களில் ஏஐ செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் சூப்பர் இன்டெலிஜன்ஸ் என்ற ஒரு குழுவை நியமித்து, அதற்கான ஆள்களை உலகளவில் தேர்வும் செய்து வந்தார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்தவர்களுக்கும் எலான் மஸ்க் அழைப்பு விடுத்து வந்தார். இந்த நிலையில்தான், தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.