வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துகிறதா? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!
ஜப்பான் அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை பற்றி...
வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “அவசர எச்சரிக்கை. வடகொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி அவரசநிலை பிரகடனத்தை செயல்படுத்தி ஏவுகணையின் பாதையைத் தீர்மானிக்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனை ஜப்பானில் பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதாக ஜப்பான் கடற்படை தெரிவித்த நிலையில், கடலுக்குச் சென்ற கப்பல்களை அவசரமாகக் கரைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது,
ஏவுகணை சென்ற பாதையைக் கணக்கிடுகையில் ஜப்பான் பிரதேசத்திற்கு உடனடி ஆபத்து எதுமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார எல்லைக்கு வெளியே கடலில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணையின் தாக்கத்தை மதிப்பிட்ட ஜப்பானிய அதிகாரிகள் இதுவரை எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
தென் கொரியாவும் இந்த ஏவுகணைச் சோதனையை கண்காணித்த நிலையில் வடகொரியா கிழக்கு நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து ஆண்டுதோறும் நிகழ்த்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை தற்போது நடத்திவருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றமான சூழலை உருவாக்கிய நிலையில் இந்த ஏவுகணைச் சோதனை நடைபெற்றுள்ளது.
ஜப்பான் அரசு இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவசரக்குழு கூட்டத்தை நடத்திவருகிறது.
மேலும், இந்த சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியா மேற்கொண்ட இராணுவச் சோதனைகளின் ஒரே மாதிரியான முறையில் நடப்பதாக ஜப்பான் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, வட கொரியா கடந்த ஜனவரி 27 அன்று ஜப்பான் கடல்பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவை இதேபோல ஜப்பானின் சிறப்பு பொருளாதார எல்லைக்கு வெளியே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
Japan activates crisis team as North Korea launches suspected ballistic missile
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.