கமுதி அருகே காவல்துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகளின் துணையுடன் மணல் அள்ள முயன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகளை அப்பகுதி விவசாயிகள் வியாழக்கிழமை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செங்ககோட்டைப்பட்டி, செங்கப்படை, கீழவலசை, பாக்குவெட்டி, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மலட்டாற்றுப் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயப் பணிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் இரவு பகலாக சிலர் அதிகாரிகள் போலீஸார் ஒத்துழைப்புடன் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டைப்பட்டி மலட்டாற்றில் போலீஸார் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் மணல் அள்ளுவதற்கு வியாழக்கிழமை மணல் அள்ளும் வாகனம் மற்றும் டிராக்டர்களுடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போலீஸார், ஊராட்சி நிர்வாக அதிகாரிகளையும், மணல் அள்ளக் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம், டிராக்டர்களை சிறை பிடித்தும், முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால் வேறு வழியின்றி பேரையூர் போலீஸார் மணல் அள்ள வந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.