தனுஷ்கோடியில் சிலிண்டர் வெடித்ததில் உணவகம் எரிந்து சேதம் : பெண் காயம்
தனுஷ்கோடியில் குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை
தனுஷ்கோடியில் குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கடலில் பிடித்து வரும் மீன்களை உடனே சமைத்து வழங்க ஓலைக் குடிசைகளில் ஏராளமான சிறிய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முகுந்தராயர்சத்திரம் பகுதியில் அதிசயம் என்ற பெண்ணுக்குச் சொந்தமான உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவு சமைக்கும் பணியில் அவரது தாயார் மேரி, அதிசயத்தின் மகள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு வரும் குழாயில் திடீரென தீ ப்பிடித்துள்ளது. இதனை கண்ட அதிசயம், அவரது தாய் மேரி ஆகியோர் மகளை இழுத்துக் கொண்டு உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளனர். சற்று நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கடை தீப் பிடித்து, அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் தீக்காயம் அடைந்த அதிசயம் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெண்கள் விரைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தனுஷ்கோடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.