முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் கண்காணிப்புக் கேமராவை உடைத்து ஏ.டி.எம் மையத்தில் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட முயன்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் பிரதான கடை வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் அங்கு பணம் வைத்திருக்கும் இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து ராமேசுவரம் பாரதி நகரைச் சேர்ந்த வங்கி பணியாளர் நம்புக்குமார் (34) கீழத்தூவல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.