இளைஞர்களால் வெட்டப்பட்ட கிணறுக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தரக் கோரிக்கை
திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் இளைஞர்களால் வெட்டப்பட்ட கிணறுக்கு உறை இறக்கித் தரவும், சுற்றுச்சுவர் அமைக்கவும்
திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் இளைஞர்களால் வெட்டப்பட்ட கிணறுக்கு உறை இறக்கித் தரவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா ஆதியூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட காரங்காடு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இக்கிராமத்து மக்கள் பல மைல் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட துறையினரிடம் புகார் அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை.
இதனால் இக்கிராமத்து இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்க்க களமிறங்கினார்கள். அதன் விளைவாக இக்கிராமத்தில் ஏந்தல் ஊருணியில் இருந்த கருவேல மரங்களை அகற்றி குடிதண்ணீர் கிணறு அமைத்தனர்.
இதில் தற்போது நல்ல தண்ணீர் கிடைத்துள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இதற்கு உறை, சுற்றுச்சுவர் அரசு அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.