ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை வியாழக்கிழமை ஆட்டோவில் கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால்
ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை வியாழக்கிழமை ஆட்டோவில் கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால் தாக்கியதில் அவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் எஸ்.எம். அக்ரஹாரம் சுப்பையா சேர்வை சந்து பகுதியில் வசித்து வருபவர் ராமன் மகன் வீரபாகு (48). ஆட்டோ ஓட்டுநரான இவர் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருவர் பேராவூரில் உள்ள ஒருவரை அழைத்து வர ஆட்டோ தேவைப்படுகிறது என்று வீரபாகுவை அழைத்துச் சென்றுள்ளனர். பேராவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் இருளில் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆட்டோவை வீரபாகு நிறுத்தியதும் அங்கு வந்த மேலும் 3 பேர் சேர்ந்து அரிவாள், கத்தி, கம்பு போன்றவற்றால் வீரபாகுவை தாக்கியுள்ளனர். 5 பேரும் அவரை தாக்கிக் கொண்டிருந்தபோதே வீரபாகு அவ்வழியாக வந்த நகரப் பேருந்தில் ஏறி தப்பி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார். தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வீரபாகு பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டி.எஸ்.பி. எஸ். நடராஜ், ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிவசக்தி ஆகியோர் வீரபாகுவிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக வீரபாகுவின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வீரபாகு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் துரை. கண்ணன், மாவட்ட செயலாளர் குமார், ஆத்ம கார்த்திக், இளைஞணி நிர்வாகி மணிமாறன் உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸாரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.