பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட போக்குவரத்து காவல்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், மோட்டார் வாகன பாதுகாப்புத்துறை மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் தியாகி முத்துச்சாமி அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதரம் சரக காவல்துறை துணைத் தலைவர் என்.காமினி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்புப் படை நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.அய்யப்பன் முகாமின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.
அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் வி.சரவணன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பொ.சந்திரசேகரன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களிடம் வாகன ஓட்டுநர் உரிமத்தின் அவசியம் மற்றும் விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர்.மோகன்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.மாணிக்கம் ஆகியோர் பேசினர்.
இதில் கருத்தாளராக அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் என்.ஆர்.நாகநாதன் கருத்துக்களை எடுத்துரைத்தார். வாகன விபத்திற்கான காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் டி.பி.ராஜகோபால் பேசினார். நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சங்கர் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில்100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ரத்த தானம் செய்தனர். அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஏ.இருளப்பன் நன்றி கூறினார்.