டிராக்டரிலிருந்து குதித்த ஓட்டுநர் சாவு
திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், உறுதிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (28). இவர், திருவாடானை அருகே உள்ள உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை வழக்கம்போல் தண்ணீர் கொண்டு சென்று இறக்கிவிட்டு, உப்பூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. அதையடுத்து, ஓட்டுநர் சங்கர் உயிர் தப்பிப்பதற்காக கீழே குதித்தார். இருப்பினும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.