முதுகுளத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால், 20-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகச் செல்கிறது.
இதே போல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகமான அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தரிசு நிலங்களில் தேங்கி எந்த பயன்பாட்டுக்கும் இல்லாமல் வீணாகிறது.
இதனால் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் குடி தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை ஒரத்தில் வீணாகி வரும் தண்ணீரில் சிலர் வாகனங்களை சுத்தம் செய்கின்றனர். இதனால் குழாய் வழியாக சுகாதாரமற்ற தண்ணீர் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை முழுமையாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.