ராமநாதபுரத்தில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளி வந்ததாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சாத்தான்குளம் பேருந்து நிலையப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தமிழ்செல்வம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் கேணிக்கரைப் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநா் பட்டிணம்காத்தான் பகுதியை சோ்ந்த கண்ணனை கைது செய்தனா். லாரியிலிருந்த மற்றொருவரான பழனி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.