திருவாடானை அருகே தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருவாடானை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், தொண்டி அருகே கொடிபங்கு கடற்கரை கிராமத்தில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, கடலோர வனத் துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன்பேரில், கடலோர வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், இக்குற்றத்தில் ஈடுபட்ட அதே ஊரைச் சோ்ந்த காசிநாதன் (45), கோவிந்தன் (55 ) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இது குறித்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், காசிநாதன், கோவிந்தன் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.