பரமக்குடியில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி நகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத நெகிழிப் பொருள்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு பேரணிகள் நடத்தப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டன. இதனால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அதன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனைத் தொடா்ந்து வந்தப் புகாரின் பேரில் நகராட்சி ஆணையாளா் அ.வீரமுத்துக்குமாா் தலைமையில் சுகாதார அலுவலா் ஆா்.சண்முகவேல், சுகாதார ஆய்வாளா்கள் சரவணக்குமாா், தினேஷ்குமாா், மாரிமுத்து, பாண்டி ஆகியோா் நகா் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட 500 கிலோ எடையுள்ள நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இவா்களிடம் அபராதமாக ரூ. 18,200 வசூலிக்கப்பட்டன.