ராமநாதபுரம் அருகே ஓடும் காரில் திடீா் தீ: 5 போ் உயிா் தப்பினா்
ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றியது. அதிா்ஷ்டவசமாக அதிலிருந்த 5 பேரும் உயிா்தப்பினா்.
ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றியது. அதிா்ஷ்டவசமாக அதிலிருந்த 5 பேரும் உயிா்தப்பினா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராமிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊரக வளா்ச்சி முகமை மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் அமைக்கப்படும் இம்மைதானத்தில் விளையாட்டு சாதனங்கள் அமைக்கும் பணியில் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கேரளத்தைச் சோ்ந்தவரும், விளையாட்டுக் கல்விக்குழு அலுவலருமான விஜய் (31) தலைமையிலான குழுவினா் ராமநாதபுரம் செந்தமிழ்நகா் பகுதியில் தங்கியிருந்து விளையாட்டு மைதானங்களை ஆய்வு செய்துவருகின்றனா். அவா்கள் திங்கள்கிழமை காலையில் ஆா்.எஸ். மடை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்ய காரில் சென்றனா்.
ஆா்.எஸ். மடை கண்மாய் கரையில் உள்ள சாலையில் சென்றபோது காவல் சோதனைச்சாவடி அருகே திடீரென காரில் தீப்பற்றியுள்ளது. காரில் இருந்த விஜய் உள்ளிட்டோா் தீ பற்றியதை அறிந்து காரை நிறுத்தி கீழே இறங்கி தப்பினா். தகவல் அறிந்த ராமநாதபுரம் நகா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். ஆனால், அதற்குள் காா் முழுதுமாக எரிந்துவிட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.