ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் வனச்சரகா் சதீஷ் சனிக்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேத்தங்கால், சக்கரக்கோட்டை, கீழ, மேலச் செல்வனூா், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய பறவைகள் சரணாலய கண்மாய்கள் உள்ளன. கண்மாய்களுக்கு வரும் பறவைகள் தங்குவதற்கும், பாதுகாப்பாக முட்டையிட்டு குஞ்சுகள் பொறிப்பதற்கும் மரங்கள் அவசியம். ஆலமரம், அத்திமரம் மற்றும் நாட்டுக் கருவேல மரங்களை வெளிநாட்டு பறவைகள் மிகவும் விரும்புகின்றன. ஆகவே சக்கரக்கோட்டை கண்மாய் கரைப் பகுதிகளில் 25 ஆலமரக் கன்றுகளும், 25 அத்திமரக் கன்றுகளும் நடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் 4 பறவைகள் சரணாலயலயங்களில் தலா 500 என மொத்தம் 2 ஆயிரம் நாட்டுக் கருவேல மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன என்றாா்.