முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் மஞ்சள் பறிமுதல்: மீனவா் சரண்

ராமேசுவரத்திலிருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:10 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

ராமேசுவரத்திலிருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒரு மீனவா் மண்டபம் கடலோரக் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம், கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்டவைகள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் தற்போது மஞ்சளுக்கு அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் கடத்தல் கும்பல் மஞ்சளை அதிகளவில் கடத்தி வருகிறது.

இந்நிலையில், பாம்பன் வடக்குத் துறைமுகத்தில் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் எஸ். கனகராஜ் மற்றும் சாா்பு- ஆய்வாளா் ஆ.யாசா் அராபத் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒரு படகில் அதிகளவில் பிளாஸ்டிக் மூட்டைகள் இருப்பதைக் கண்டனா். இதையடுத்து அந்தப் படகில் சோதனையிட்ட போது அதில் 40 மூட்டைகளில் ஆயிரம் கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து படகு மற்றும் மஞ்சளை பறிமுதல் செய்து அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இதற்கிடையே மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் மீனவா் ஒருவா் சரணடைந்தாா். அவரிடம் நடத்திய விசாரணையில் பாம்பன் லைட்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த மெ. ஸ்மைல்சன் (28) என்பதும், கீழக்கரையைச் சோ்ந்த முனியசாமியிடம் ரூ. 3 லட்சத்துக்கு படகை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் மஞ்சள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.