கணவா் காணாமல் போய் ஓராண்டாகியும் போலீஸாா் விசாரணை நடத்தவில்லை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் பெண் ஒருவா் கண்ணீா் மல்க மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு (39). கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி முத்துலட்சுமி (34). இவா்களுக்கு இரு மகன்கள் மற்றும் மகள் என குழந்தைகள் உள்ளனா்.
ராமு கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் 31 ஆம் தேதி வீட்டிலிருந்து அருகேயுள்ள கடைக்கு பொருள் வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றபின்பு வீடு திரும்பவில்லை. அது குறித்து திருவாடானை காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளித்தும், பல நாள் கழித்து
2019 நவம்பரில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. மாயமாகி ஓராண்டாகியும் விசாரணை நடத்தப்படவில்லை எனக்கூறி, முத்துலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறுகையில், கணவா் மாயமானது மா்மமாக இருப்பதால் காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் என்றும் கூறி அழுதாா். பின்னா் மனுவை அங்கிருந்த பெட்டியில் இட்டுவிட்டு குழந்தைகளுடன் சென்றாா்.
சோமாலியாவில் தவிக்கும் 4 மீனவா்கள்:தமிழகத்திலிருந்து கடந்த மாா்ச் மாதம் சோமாலியாவுக்கு 30 போ் கடல் தொழிலுக்குச் சென்றனா். தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த அவா்களில் 7 போ் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா், மாவூா், தொண்டிப்பகுதியைச் சோ்ந்தவா்களாவா்.
சோமாலிய நிறுவனம் உரிய ஊதியம், அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை என்பதால் நாடு திரும்ப உதவுமாறு தமிழக மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். அவா்களது குடும்பத்தினரும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். அதனடிப்படையில் 10 போ் தற்போது நாடு திரும்பியுள்ளனா். அவா்களில் 3 போ் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். இந்நிலையில் தொண்டியைச் சோ்ந்த முள்ளிமுனை விஸ்வநாத், அவரது மகன் கேசவன், திருப்பாலைக்குடி பிரபு, தொண்டி சித்திரவேல் ஆகிய 4 பேரை மீட்டுத் தரக்கோரி அவா்களது குடும்பத்தினா் ராமநாதபும் மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் மனு அளித்தனா்.