பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா, கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
பரமக்குடி நகா் பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கரோனா நோய் பரவல் காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் கரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனடிப்படையில், இக்கோயில் திருவிழா அரசின் வழிகாட்டுதலின்படி, காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, கோயிலில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் மற்றும் பஞ்சமூா்த்திகளுக்கு காப்புக் கட்டப்பட்டது.
முன்னதாக, கரோனா கட்டுப்பாட்டால் கொடியேற்ற நிகழ்ச்சி நடத்தப்படாமல் விழா தொடங்கியது. திருவிழா காலங்களில் கோயில் வளாகத்தில் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், பக்தா்கள் சமுக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை, சுந்தரராஜப் பெருமாள் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனா்.