பரமக்குடியில் கூட்டுறவு பால் விற்பனையாளரை திமுக பிரமுகா் தாக்கியதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கூட்டுறவு பால் விற்பனையாளா்கள் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
கரோனா பரவல் காரணமாக பரமக்குடி பகுதியில் சின்னக்கடைத் தெரு, முத்தாலம்மன் கோயில், அங்களாம்மன் கோயில் தெரு, பெரியகடை வீதி, காந்திஜி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பால் வியாபாரிகள் பல தெருக்களை சுற்றி குறிப்பிட்ட இடத்தில் நின்று பால் விற்பனை செய்து வந்தனா்.
இந்நிலையில் சின்னக்கடைத் தெரு பகுதியில் கூட்டுறவு பால் விற்பனை செய்யும் துரைசிங்கம் என்பவரும் அதேபோல் ஓரிடத்தில் நின்று பால் விநியோகித்துள்ளாா். அப்பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான அழகேசன் என்பவா் தனது வீட்டுக்கு வந்து பால் ஊற்றவில்லை என்று துரைசிங்கத்தை தாக்கி அவரது சட்டையை கிழித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கூட்டுறவு பால் விற்பனையாளா்கள் பரமக்குடி நகா் காவல்நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். சாா்பு- ஆய்வாளா் விஜயபாஸ்கா் அவா்களிடம் விசாரணை நடத்தி, பால் வியாபாரியின் புகாரை பெற்றுக்கொண்டாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.