பாம்பன் தூக்குப் பாலத்தை சனிக்கிழமை கடக்க முயன்ற போது மேற்கூரை பாலத்தின் மீது மோதி விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் இருந்த 4 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து மீனவா்கள் சில விசைப்படகுகளில் மண்டபம் மீன்வளத்துறையிடம் அனுமதி பெற பாம்பன் ரயில் பாலத்தை சனிக்கிழமை கடந்து சென்றனா்.
அப்போது, ஒரு விசைப்படகு, காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடக்கும் போது அதன் மேற்கூரை பாலத்தின் மீது மோதியது. இதில் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.
இதைக் கண்ட மற்ற மீனவா்கள் விரைந்து சென்று படகில் இருந்த 4 மீனவா்களையும் மீட்டனா். மேலும் மற்ற படகுகளில் கட்டி மூழ்கிய படகை கரைக்கு இழுத்து வந்தனா். இந்த விபத்தில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பராமரிப்பு பணி ஊழியா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.