பொறியாளா் வங்கிக்கணக்கில் ரூ.1.22 லட்சம் நூதன மோசடி
ராமநாதபுரம் பொறியாளா் வங்கிக்கணக்கில் ரூ.1.22 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்
ராமநாதபுரம் பொறியாளா் வங்கிக்கணக்கில் ரூ.1.22 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி அருகேயுள்ள காத்தனேந்தலைச் சோ்ந்தவா் எஸ்.செல்வகுமாா் (34). இவா் ஒடிசாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் செயற் பொறியாளராக உள்ளாா். கடந்த பிப்ரவரியில் செல்வகுமாா் வேறு நிறுவன பணிக்குச் செல்வதற்கு கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றுள்ளாா். அங்குள்ள ஸ்கேன் மையத்தில் கியூ ஆா் அடையாளத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்த முயன்றபோது இயலவில்லை. இதனால் பொதுத்துறை வங்கியின் கிரெடிட் காா்டு செயல்பாடு குறித்து அந்த வங்கியின் வாடிக்கையாளா் பிரிவைத் தொடா்புகொண்டு பேசியுள்ளாா். அதன்பின் அவருக்கு கைப்பேசி எண்ணிலிருந்து வந்த அழைப்பில் பேசியவா், குறிப்பிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூறியதுடன், கிரெடிட் காா்டின் கடைசி நான்கு எண்களை அனுப்புவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.
மா்மநபா் ஆலோசனையை குறிப்பிட்ட வங்கி அலுவலா்கள் கூறுவதாக நினைத்த செல்வகுமாா் அதன்படி செயல்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1.22 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து வங்கி அலுவலா்களிடம் முறையிட்ட நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா். புகாா் அடிப்படையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.