புகழ்பெற்ற டோரேமான் கார்ட்டூன் தொடரின் இயக்குநர் ஷிபயாமா காலமானார்!
புகழ்பெற்ற கார்ட்டூன் தொடரான டோரமானின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா காலமானார்...
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடரான டோரேமானின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அனிமேஷன் தொடர்களின் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் “டோரேமான்”. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், டோரேமான் தொடரின் இயக்குநரும், அஜியாடோ அனிமேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுடோமு ஷிபயாமா (வயது 84) கடந்த மார்ச் 6 அன்று காலமானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அன்று அஜியாடோ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியின் மூலம் இயக்குநர் சுடோமு ஷிபயாமா நீண்டகாலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உலகம் முழுவதுமுள்ள டோரேமான் ரசிகர்கள் இயக்குநர் சுடோமு ஷிபயாமாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, டோரேமான் கார்ட்டூன் தொடர்களைக் கடந்த 1984 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இயக்குநர் சுடோமு ஷிபயாமா இயக்கியது குறிப்பிடத்தக்கது.