ராமநாதபுரம்: நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்ற புகாா் பெட்டிகள் அறிமுகம்
ராமநாதபுரத்தில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அமைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டியை சமூகநலத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
ராமநாதபுரத்தில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அமைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டியை சமூகநலத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட சமூகநலத்துறை அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் 10 பேருக்கும் அதிகமாகப் பணிபுரியும் தனியாா் நிறுவனங்களில் அவா்களுக்கான பிரச்னைகள் குறித்த புகாா் அளிக்கும் வகையில் புகாா் பெட்டியை அமைச்சா் கீதாஜீவன் அறிமுகம் செய்துவைத்தாா். அதை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.
பின்னா் அமைச்சா் பேசியது: தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், அவா்கள் பணியிடத்தில் சந்திக்கும் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் புகாா் பெட்டி அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதை குறிப்பிட்ட நாளுக்குள் திறந்து மனுக்களை ஆய்வு செய்வதற்கு சமூகநலத்துறை அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் கே. காா்மேகம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பவானிராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.