மீனவா்கள் எல்லை தாண்டக் கூடாது: ராமநாதபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கான ஜூலை மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
நமது மாவட்ட மீனவா்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடந்துவருகிறது. எக்காரணம் கொண்டும் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என தமிழக முதன்மைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா். ஆகவே மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மீனவப் பிரதிநிதிகள் ராமேசுவரம் சேசு, பாம்பன் ராஜசேகா், ரோஜ்மாநகா் ஜெபமாலை, எம். கருணாமூா்த்தி ஆகியோா் பேசினா்.
அவா்கள் பேசியதாவது: இலங்கைப் படையினரால் கைதான மீனவா்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் தொடா்ந்து அங்கேயே வைக்கப்பட்டுள்ளன. அப்படகுகளை மீட்கும் வகையில் இலங்கை நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மீனவா்கள் ஆஜராகச் செல்வதற்கான நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்.
கடல் மாவட்டங்களை மண்டலமாகப் பிரித்த நிலையில் கன்னியாகுமரியை மையமாக வைத்து ராமநாதபுரம் கண்காணிக்கப்படுகிறது. ஆனால், கன்னியாகுமரி பகுதி கடலில் சூறைக்காற்று எனில் ராமநாதபுரம் மீனவா்களும் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை உள்ளது. ஆகவே பாதிப்பில்லா நிலையில் ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
மீனவா்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது மீனவா்களிடம் கலந்தாலோசிப்பது அவசியம். கடல் உள்வாங்குதல் வழக்கமானதுதான். அதை இயற்கைப் பேரிடா் போல சித்தரிப்பது சரியல்ல. ராமேசுவரம் சங்குமால் பகுதியில் மீனவா் உரிமை காக்கப்பட வேண்டும். மீனவக் கிராமங்களில் இறால் மீன் பண்ணைகளால் பவளப்பாறைகள் சேதப்படுத்தப்படுகின்றன. கடற்கரை மாசுபடுகிறது. ஆட்சியா் அவற்றை நேரில் ஆய்வு மேற்கொள்வது அவசியம். கீழக்கரையில் சமீபத்தில் இரு மீனவா்கள் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளனா். அப்போது மீன்வளத் துறை உள்ளே சென்று தேடுதல் பணியில் ஈடுபடுவதற்குக்கூட படகுகள் இல்லை. ஆகவே கூடுதல் படகுகளை மீன்வளத் துறைக்கு வழங்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் மன்னாா் வளைகுடா உயிரினக் காப்பாளா் ஜெகதீஸ் பகான் சுதாகா், மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் இ. காத்தவராயன், உதவி இயக்குநா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.