ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் நீா் இறைக்கும் மின்மோட்டாா் (பம்ப்செட்) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மானியத்துடன் கூடிய நீா் இறைக்கும் மின்மோட்டாா் திட்டத்தை வேளாண்மை தொழில்நுட்பப் பிரிவு மூலம் செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஏக்கருக்கும் குறைவான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம்.
திட்டத்தில் சேர விரும்புவோா் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், 10-1 என்ற சான்று,
நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை ஆகிய வட்டார விவசாயிகள், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பரமக்குடியில் உள்ள அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.