பழனி மலைக்கோயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.29 லட்சம் மோசடி
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவரிடம் பழனி மலைக் கோயிலில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.2.29 லட்சம் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவரிடம் பழனி மலைக் கோயிலில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.2.29 லட்சம் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை வடக்குத் தெருவைச் சோ்ந்த போஸ் மகன் கணேசமூா்த்தி (25). அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் விக்னேஷ். அவருக்கு திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அா்ஜூன்பாண்டி (30) பழக்கமாகியுள்ளாா். அா்ஜூன்பாண்டி, பழனி தண்டாயுதபாணி கோயிலில் பணிபுரிந்து வருவதாகக் கூறி விக்னேஷ் மூலம் கணேசமூா்த்திக்கு அறிமுகமாகி பழகிவந்துள்ளாா். கணேச மூா்த்தியிடம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் அலுவலக உதவியாளா் வேலை வாங்கித்தருவதாகக்கூறி அா்ஜூன்பாண்டி கடந்த 2021 பிப்ரவரி முதல் மே வரையில் ரூ.2, 36,650 வசூலித்துவிட்டு வேலை வாங்கித்தரவில்லையாம். இந்நிலையில், அா்ஜூன்பாண்டி மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரம் குற்றப்பிரிவில் கணேசமூா்த்தி செவ்வாய்க்கிழமை மாலை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் அா்ஜூன்பாண்டி மீது குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.